காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி, சென்னை காவலர்களுக்காகக் காவலர்களே முகக்கவசங்கள் மற்றும் சானிடைசர்கள் தயாரித்து வருகின்றனர்.

சென்னையில் தற்போது கொரோனா பரவல் தடுப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் குறைந்த பட்ச தடுப்புக் கவசங்களாக முகக்கவசம், கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி சானிடைசர்கள் திகழ்கின்றன. ஆனால் இவை தட்டுப்பாடு காரணமாக மருந்துக்கடைகளிலும் கிடைப்பதில்லை.


அவ்வாறு விற்றாலும் அவை அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.


அரசும், தனியார் தொண்டு நிறுவனங்களும் சில இடங்களில்தான் இவற்றை பொதுமக்களுக்கு விநியோகம் செய்கின்றனர். அதேசமயம் மக்களை காக்க கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினரின் பாதுகாப்பு கேள்விக்குறிதான்.


சென்னை காவல்துறையில் மொத்தம் 20,000 போலீசார் பணிபுரிகின்றனர். அவர்கள் அனைவருக்கும் முகக்கவசம் கிடைப்பது தட்டுப்பாடாகிவிட்டது. இந்நிலையில் காவல்துறையினருக்கு வேண்டிய முக கவசங்களை தாங்களே தயாரித்துக் கொள்வது குறித்து சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


பின்னர் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தின் மேல்தளத்தில் முகக்கவசம் தயாரிக்க உத்தரவிட்டார்.


அதன்படி, சென்னை நகரில் பணிபுரியும் ஆயுதப்படை மற்றும் இதர பிரிவுகளில் பணியாற்றும் தையல் தெரிந்த பெண் போலீசார் உள்ளிட்ட 30 பேர் முககக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


அவர்களுக்கு எம்பிராய்டரிங் தையற்கலை வல்லுநர்களை வரவழைத்து பயிற்சியும் அளிக்கப்பட்டது. காவலர்களின் வீட்டில் உள்ள 20 தையல் மிஷின்கள் இந்த பணிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.


கொரோனா வைரஸ் தாக்காத வகையில் 3 அடுக்கு கொண்ட முகக்கசவங்கள் தயார் செய்யப்படுகின்றன. முகக் கவசம் தயாரிப்பதற்கு திருப்பூரில் இருந்து ரூ.1 லட்சம் செலவில் மூலப்பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன.


2 அல்லது 3 நாட்கள் வரை பயன்படுத்தும் வகையில் தரமான துணியால் முகக்கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன. போலீசாரே சொந்தமாக தயாரிப்பதால் ஒரு முகக் கவசத்தின் அடக்க விலை ரூ. 2 மட்டுமே ஆகிறது.


முதற்கட்டமாக 2,000 முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவை சென்னை நகரில் பாதுகாப்புப் பணியில் உள்ள போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளன.


இதுபோன்று மொத்தம் 60 ஆயிரம் முகக்கவசங்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் வாங்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதே போல சானிடைசர் தயாரிக்கும் பணியிலும் ஆயுதப்படை காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமும் 500 லிட்டர் சானிடைசர்களை தயாரித்து சென்னையில் அனைத்து போலீசாருக்கும் வழங்கப்பட இருக்கிறது. 100 எம்எல் பாட்டிலில் நிரப்பி கைக்குள்ளேயே வைத்துக் கொள்ளும் படியான சானிடைசர்களை வழங்க உள்ளனர்.


ஆயுதப்படை காவலர்களுக்கு சென்னை மருந்தியல் கல்லூரியின் டாக்டர்கள் சானிடைசர்களை எப்படி தயாரிப்பது குறித்த பயிற்சியை வழங்கி உள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்