தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்: சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை
தேவையின்றி ஏமாற்றி இருசக்கர வாகனங்களில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.
சென்னையில் இன்று (ஏப்.7) சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
"அத்தியாவசியப் பொருட்களை வாங்க காலை 6 மணியில் இருந்து பிற்பகல் 1 மணி வரை அரசு அனுமதி அளித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் எல்லாமே மக்கள் வசிக்கும் 1-2 கிலோ மீட்டருக்குள்ளேயே கிடைக்கும். அவர்கள் நடந்தே சென்று வாங்கலாம். ஒரு வாரத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். தினமும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் வாங்குவதாகக் கூறி இருசக்கர வாகனங்களில் பல கிலோ மீட்டர் செல்வதாகப் புகார்கள் வந்திருக்கின்றன. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை ஊரடங்கு விதிகளை மீறியதாக சென்னையில் 30 ஆயிரம் பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேவையின்றி சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். நடவடிக்கை தொடரும்.
நடவடிக்கையிலேயே எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. இதன் தீவிரத்தன்மையை புரிந்துகொள்ளாமல் மக்கள் இருக்கக் கூடாது. இதன் வீரியத்தைப் புரிந்துகொண்டு தங்களையும் தங்கள் குடும்பத்தையும் மக்கள் தற்காத்துக்கொள்ள வேண்டும். ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. நோய்த்தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை மாநகராட்சி எடுத்திருக்கிறது".
இவ்வாறு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.