பணியிட மாற்றம் பெற்றுத் தர பணம் கேட்பதாக புதிய செவிலியர்கள் புகார்...
திருச்சி: கரோனா வேரஸ் தடுப்பு மற்றும் மருத்துவப் பணிக்காக ஆய்வக நுட்பநர் 1,500 பேர், மருத்துவர்கள் 500 பேர், செவிலியர்கள் 1,000 பேர் விரைவில் நியமிக்கப்படுவர் என்று அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தின் தொடரில் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவித்தார்.
இதன்படி, திருச்சி மாவட் டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் 39 பேருக்கு மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து பணி நியமன ஆணைகள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில், அவர்களில் சிலரை செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர், குறிப்பிட்டுள்ள பணியிடத்துக்கு பதிலாக நீங்கள் விரும்பும் பணியிடத்தை மாற்றித் தருகிறேன் எனக் கூறி பணம் கேட்டுள்ளார்.
இன்னும் பணியில் சேராத நிலையில், இவ்வாறு கேட்பது அதிர்ச்சியளிப்பதாக அவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரத்தினர் கூறியது: திருச்சி மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் 39 பேரில் ஒருவர் பணி வேண்டாம் என்று மறுத்துள்ளார்.
31 பேர் பணியில் சேர்ந்துள்ளனர். மற்ற 7 பேரை பணியில் சேருமாறு அறிவுறுத்தியுள்ளோம்.
புதிதாக நியமிக்கப்பட்ட செவிலியர்களைத் தொடர்பு கொண்டு பேசியவருக்கும், அரசின் துறைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதுகுறித்து புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.