தென்காசி மாவட்டத்தில் சிறுத்தைக்கு தீவைத்து சிக்கிய தம்பிகள் ..! டிக்டாக்கால் தொக்கா மாட்டிய சோகம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த மைபாறை மலை பகுதியில் பாறை இடுக்கில் சிறுத்தை சிக்கி இருப்பதாக கூறி காட்டுக்கு தீவைத்து டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட 4 தம்பிகள் கொத்தாக வனத்துறையினரிடம் சிக்கினர் 


ஊரடங்கில் வீட்டுக்குள் அடங்க மறுக்கும் கால்களை கொண்ட காளையர்கள் அவ்வபோது கும்பலாக சுற்றி போலீசிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது ஒருவகை என்றால், செய்யும் தவறை வீடியோவாக பதிவிட்டு வீடு தேடி வில்லங்கத்தை வரவழைக்கும் டிக்டாக் சக்கரவர்த்திகள் புது வகை.


அந்த வகையில் தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அடுத்த மைபாறைபகுதி மலை இடுக்கு ஒன்றில் சிறுத்தை சிக்கி இருப்பதாக கூறி தீவைத்து எரித்த 4 தம்பிகள், அதை வீடியோவாக எடுத்து டிக்டாக்கில் பதிவேற்றம் செய்தனர்.


இதனை பார்த்து டிக்டாக் அடிமைகள் சிலர் பாராட்டி லைக்குகள் தெரிவிக்க, தகவல் அறிந்து விரைந்த வனத்துறையினர் சிறுத்தைக்கு தீவைத்ததாக கூறி டிக்டாக் வீடியோ வெளியிட்ட சக்ரவர்த்திகள் 4 பேரையும் சுற்றி வளைத்தனர். டிக்டாக்கில் லைக்குகள் பெறுவதற்காக இல்லாத சிறுத்தையை தீவைத்து எரித்ததாக கதைவிட்டதாக டிக்டாக்கிலேயே கதறினார் கடல்புறா நாகராஜ் .


அவர்களிடம் சிறுத்தை சிக்கவில்லை யென்றாலும், காட்டிற்கு தீவைத்த குற்றத்திற்காக 4 பேரும் வனத்துறையினரிடம் வசமாக சிக்கிக் கொண்டனர். 4 பேரையும் கைது செய்த வனத்துறையினர் தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம், 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.


4 பேரையும் வரிசையாக திருமண பந்தியில் அமர வைப்பது போல தரையில் உட்காரவைத்து குழுப்புகைப்படம் எடுப்பது போல டிக்டாக் வீடியோ எடுத்து அவரது டிக்டாக்கில் பதிவேற்றம் செய்தனர்


கொரோனா ஊடரங்கிற்கு கட்டுப்படாமல காட்டுக்குள் வெட்டுக்கிளிகள் போல வலம் வந்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சான்றாக நிகழ்ந்திருக்கின்றது இந்த சம்பவம்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்