எதிர்வரிசைக்கு செல்லும் எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்: ஓம் பிர்லா எச்சரிக்கை
புதுடில்லி: லோக்சபாவில் அமளியில் ஈடுபடும் எதிர்கட்சி எம்.பி.,க்கள் எதிர்வரிசைக்கு சென்றால், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவார்கள் என சபாநாயகர் ஓம்பிர்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லோக்சபாவில் டில்லி வன்முறை தொடர்பாக விவாதிக்க கோரி, காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பாஜ., எம்பி., தன்னை தாக்கியதாக காங்கிரசின் ரம்யா ஹரிதாசும், காங்., எம்பி.,க்கள் அநாகரிகமாக நடந்து கொண்டதாக பாஜ., அமைச்சர் ஸ்மிருதி இரானியும் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் கூறினர்.
இரு கட்சியினரும் மாறி மாறி குற்றம் சாட்டியதால் அமளி ஏற்பட்டது. இதனால் அவை முழுவதும் கூச்சல் குழப்பம் நிலவியது. அமளியில் ஈடுபட்ட எதிர்கட்சியினரை சமாதானப்படுத்த முயன்றார்.
அப்போது ஓம் பிர்லா பேசுகையில், டில்லி வன்முறை தொடர்பாக ஹோலி பண்டிகைக்கு பின் விவாதம் நடத்த அரசு தயாராக இருக்கிறது.
அதுவரை அவையை சுமூகமாக நடத்தி செல்ல, உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றார். அப்படி இருந்தும் எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், பொறுமை இழந்த ஓம் பிர்லா, எதிர்வரிசைக்கு செல்லும் எம்.பி.,க்கள் தொடர் முழுவதும் 'சஸ்பெண்ட்' செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்