இந்திய வங்கிகள்” - புளூம்பெர்க் அறிக்கையும் YES BANK விவகாரமும்!

குறிப்பாக தற்போது நிலவும் பொருளாதார மந்தநிலையால், ஆட்டோமொபைல், ஜவுளி, தொழில்நுட்பம் ஆகிய துறைகள் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. அதனால் வேலையின்மையும் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது.


இந்நிலையில், பொருளாதாரத்தில் பெரும் பங்கினை வகிக்கும் வங்கிகளின் நிலைமையே மோசமாகியுள்ளது. தனியார் வங்கிகளில் வாங்கிய கடன்களை கட்டமுடியாமல் முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


அதன்படி, கடந்த வாரம் தனியார் வங்கியான யெஸ் வங்கியின் வாராக்கடன் அதிகரித்த காரணத்தால் யெஸ் வங்கி ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.


இதுபோல, இந்தியாவில் உள்ள பல்வேறு தனியார் வங்கிகளும் திவாலாகும் அபாயத்தில் உள்ளன. இதுதொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே புளூம்பெர்க்' (Bloomberg) என்ற அமெரிக்க நிதி நிறுவனம் ஒன்று ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், உலகம் முழுவதும் படுமோசமாக இயங்கும் முதல் 10 வங்கிகளின் பட்டியலில் இந்தியாவில் உள்ள 7 வங்கிகளின் பெயர் இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி இருந்தது.


இந்தியாவில் உள்ள வங்கிகள் வாராக்கடன் பிரச்னையால் மிகப்பெரிய அளவில் சிக்கலை சந்தித்து வருகின்றன. பல வங்கிகள் கொடுத்த கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் பெற முடியாத சூழலில்தான் வர்த்தக நிலைமை உள்ளது. இந்த நிலை நீடித்தால் இந்திய வங்கிகளின் எதிர்காலம் கவலைக்கிடமாகும் என்று புளூம்பெர்க் எச்சரித்திருந்தது. மேலும், இந்திய பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் காரணத்தால் வங்கிகளின் சொத்து மதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.


அதனால் வங்கிகள் புதிய நிதி திரட்டும் முயற்சிகளையும் எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றும் புளூம்பெர்க் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.


புளூம்பெர்க் குறிப்பிட்டுள்ள, மோசமான நிலையிலுள்ள இந்திய வங்கிகளின் பட்டியலில், Yes Bank வங்கியின் பங்குகள் ஒரு வருடத்தில் சுமார் 70% சரிந்து முதல் இடத்தில் இருந்தது. 60% சரிந்து 2வது இடத்தில் IDBI வங்கியும், 52.16% சரிந்து மூன்றாவதாக சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவும் இருந்தன.


அவற்றையடுத்து பாங்க் ஆப் இந்தியா, ஆர்பிஎல், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஓரியெண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் உள்ளிட்டவை புளூம்பெர்க்கின் அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. அறிக்கையில் குறிப்பிட்டது போல, யெஸ் பேங்க் காலியானது அதுபோல, லக்ஷ்மி விலாஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிகளின் பெயர்கள் மோடி அரசின் திவால் பட்டியலில் இருக்கும் நிலையில் தற்போது மேற்குறிப்பிட்ட வங்கிகள் திவாலாகும் பட்சத்தில் அதன் முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.


இதுபோன்று தொடர்ந்து வங்கிகள் திவாலாகும் நிலை ஏற்பட்டால் வங்கிகளின் மீதான நம்பிக்கை மக்களிடையே அறவே இல்லாமல் போகும் நிலை உண்டாகும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்