ஆணையம் பற்றி அவதூறு டி.ஜி.பி.,க்கு உத்தரவு
சென்னை :மனித உரிமைகள் ஆணையத்தை இழிவுபடுத்தும் வகையில், கருத்து தெரிவித்த, போலீஸ் கூடுதல் துணை கமிஷனர், வெள்ளத்துரை மீது நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி.,க்கு, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தின், கூடுதல் துணை கமிஷனர் வெள்ளத்துரை, மாத இதழுக்கு அளித்த பேட்டியில், 'குற்றவாளிகள் அதிகரிப்பதற்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் முக்கிய காரணம்' என, கருத்து தெரிவித்திருந்தார்.
ஆணையத்தின் கண்ணியத்தை, இழிவுப்படுத்தும் வகையிலான கருத்து குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து, ஆணைய தலைவர், துரை ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:
வெள்ளத்துரையின் கருத்து குறித்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதொடர்பான அறிக்கையை, டி.ஜி.பி., விரைவில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில், தமிழக அரசும் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் உத்தரவிட்டார்.