அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்த வராத மு.க. அழகிரி... அப்படி என்ன கோபம்...

சென்னை: திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடியாக திகழ்ந்து மறைந்த பேராசிரியர் அன்பழகன் உடலுக்கு மு.க.அழகிரி அஞ்சலி செலுத்த வராதது அவரது ஆதரவாளர்களையே அதிருப்தி கொள்ளச் செய்துள்ளது.


ஆயிரம் தான் இருந்தாலும் அண்ணன் இப்படி செய்தது தவறு என்றும், இவ்வளவு கல் மனம் கொண்டவரா எனவும் அவரது ஆதரவாளர்கள் வட்டாரத்திலேயே கடந்த இரண்டு நாட்களாக விவாதம் நடந்து வருகிறது.


திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள தன்னை மீண்டும் கட்சியில் இணைக்கக் கோரி பலமுறை கேட்டும், அதுபற்றி அன்பழகன் அலட்டிக்கொள்ளாததும், ஸ்டாலினிடம் சிபாரிசு செய்யாததும் மு.க.அழகிரியின் கோபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.


கருணாநிதி நண்பர்
மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடலுக்கு அதிமுக உட்பட அனைத்துக் கட்சி தலைவர்களும், பிரமுகர்களும் அஞ்சலி செலுத்திய நிலையில், மு.க.அழகிரி மட்டும் அஞ்சலி செலுத்த வரவில்லை. என்னதான் கோபதாபங்கள் இருந்தாலும், தனது தந்தை ஸ்தானத்தில் இருந்து வந்த அன்பழகனுக்கு அழகிரி அஞ்சலி செலுத்த தவறிய விவகாரம், அவரை கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அழகிரியின் நேற்றைய நடவடிக்கை அவரது ஆதரவாளர்களையே முகம் சுளிக்கச் செய்துள்ளது.


மன்னிப்பு மு.க.அழகிரியின் கல் மனதை கண்டு அவருடன் இருப்பவர்களே வேறு முடிவுக்கு தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.


அழகிரி முகாமில் இருந்து விரைவில் முக்கிய நிர்வாகிகள் ஒரு சிலர் ஸ்டாலினை சந்தித்து மன்னிப்பு கோரி மீண்டும் திமுகவில் இணைய முடிவெடுத்துள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் இனி காலம் காலத்துக்கும் அழகிரி மீது இது ஒரு குறையாகவே கருதப்படும்.


இதனிடையே இதன் மூலம் தாம் மீண்டும் திமுகவில் இணையப்போவதில்லை என்பதை அழகிரி சூசகமாக தெரிவித்துவிட்டார் என்றே எடுத்துக்கொள்ளலாம்.


விமர்சனம் ஓராண்டுக்கு முன்பு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை அழகிரியின் மகன் துரை தயாநிதி கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். கலைஞரின் பேரனாக இருந்துகொண்டு திராவிட இயக்கத் தலைவர் ஒருவரை விமர்சிப்பது கலைஞரின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் செயல் என விமர்சிக்கப்பட்டது.


இந்நிலையில் இப்போது முன்மாதிரியாக திகழ்ந்திருக்க வேண்டிய அழகிரி, பழைய கோபத்தை மனதில் வைத்து பேராசிரியர் உடலுக்கு அஞ்சலி செலுத்தாமல் புறக்கணித்திருப்பது திமுக தொண்டர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.


பரிந்துரைக்கவில்லை
என்னதான் இப்போது மனஸ்தாபம் ஏற்பட்டிருந்தாலும், விவரம் தெரிந்த நாள் முதல் பேராசிரியரை பெரியப்பா என அழைத்த அழகிரி இந்த விவகாரத்தில் சற்று நிதானம் இழந்துவிட்டார் என்றே கருதப்படுகிறது. அப்படி என்ன கோபம் என விசாரித்தால், ''பேராசிரியர் நினைத்திருந்தால் அழகிரியை எப்போதோ கட்சியில் சேர்த்திருக்கலாம், ஆனால் அவர் அதை செய்யவில்லை. இதனால் அவர் மீது அழகிரிக்கு மன வருத்தம் இருந்தது உண்மை.


மேலும், கருணாநிதி உயிருடன் இருந்தபோதே அழகிரிக்காக அன்பழகன் சிபாரிசு செய்திருந்தால் அவர் நிச்சயம் தட்டியிருக்கமாட்டார் ஆனால் அதையும் அன்பழகன் செய்யாததால் அழகிரிக்கு அந்த வருத்தமாக கூட இருந்திருக்கலாம்'' என பதில் வருகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்