முதல்வரை திடீரென சந்தித்த பாரிவேந்தர்.. ஆனால் மேட்டர் வேறயாம்...

சென்னை: தமிழக அரசியலில் ஒரு சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. இந்திய ஜனநாயக கட்சி நிறுவனரும், பெரம்பலுார் தொகுதி எம்பியுமான பாரிவேந்தர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியதுதான்!


முதல்வரை சந்தித்தது குறித்து சொல்லும்போது, "பெரம்பலுார் லோக்சபா தொகுதி மக்களின் கோரிக்கை தொடர்பாக, முதல்வரை சந்தித்தேன். முக்கியமான 6 கோரிக்கைகளை முன் வைத்தேன்..


அப்பகுதி மக்களின், 50 ஆண்டு கால கனவு திட்டமான, அரியலுார், பெரம்பலுார், துறையூர், நாமக்கல் ரயில் பாதை அமைக்க, வழிவகை செய்ய வேண்டும்.


இது தொடர்பாக, லோக்சபாவில் பேசினேன்.. ரயில்வே அமைச்சரை சந்தித்தும் பேசியுள்ளேன். அவர், 'இத்திட்டம் ஏற்கனவே சர்வே செய்யப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ளது.


மாநில அரசு பரிந்துரையோடு அனுப்புங்கள். நடவடிக்கை எடுப்போம்' என்றார். அதை, முதல்வரிடம் வலியுறுத்தினேன். அதேபோல மேலும் சில கோரிக்கைகள் குறித்து, முதல்வரிடம் கூறினேன். பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளார். சந்திப்பு இனிமையான சந்திப்பு.... தமிழக அரசின் ஒத்துழைப்போடு, இத்திட்டங்கள் வரும் என்று நம்புகிறேன்" என்றார்.


தேர்தல் செலவு
பாரிவேந்தர் தெரிவித்துள்ள 6 கோரிக்கைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையே.. ஆனாலும் முதல்வருடன் பாரிவேந்தரின் இந்த சந்திப்பு பல்வேறு யூகங்களை கிளப்பி விட்டு வருகிறது.. கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தவர் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர்... அப்போது தேர்தலின்போது, தமிழகம் சார்ந்த கூட்டணி கட்சியினரின் செலவுகளை மொத்தமாகவே கவனித்து கொண்டவர் என்றும் சொல்லப்பட்டது.


மரியாதை
ஆனால் சில காலமாகவே அக்கட்சியிலிருந்து விலகியே இருந்தார். பாஜகவின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றும், மரியாதை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார். ரொம்ப நாளாக கேட்டு வந்த பெரம்பலூர் தொகுதியை தர மாட்டோம் என்று சொல்லிவிடவும்தான், அப்செட் ஆனதாக கூறி, கூட்டணியில் இருந்து வெளியே வந்தார்.. திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி திடீரென அங்கு போய் இணைந்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


இலவச மருத்துவ முகாம்
பாரிவேந்தர் பெரம்பலூரை விடாமல் கேட்க காரணம், தேர்தலுக்கு முன்பாகவே தொகுதியில் இலவச மருத்துவ முகாம்களை பல்வேறு கிராமங்களில் தொடர்ந்து நடத்தி நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருப்பதுதான்..


பெரம்பலூர் மக்களுக்காக அவர் முன்னெடுத்த காரியங்கள்தான் அவரை இந்த முறையும் எம்பி தேர்தலில் அபார வெற்றி பெற செய்தது... தற்போதும் தொகுதி மக்களின் நன்மைக்காகவே முதல்வரை சந்தித்து பேசியதாக கூறுகிறார்.


திமுக எம்பி பொறுத்தவரைப ஒரு கட்சி தலைவர்தான்.. ஆனால் உதயசூரியன் சின்னத்தில் வென்றுள்ளார்.. அதனால் திமுகவின் எம்பியாகவே இவர் இப்போது கருதப்படுகிறார்..


இப்படித்தான் நாடாளுமன்ற அலுவல்களில் பதிவாகி உள்ளது.. பெரம்பலூர் தொகுதியின் பிரச்சனைகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து நாடாளுமன்றத்தில்தான் பேச வேண்டும்.. இப்படித்தான் பல எம்பிக்களும் பேசுவார்கள்.. ஆனால் இவர் மட்டும் திடீரென முதல்வரை சந்தித்து மனு அளித்திருப்பதன் உண்மை காரணம் நமக்கு தெரியவில்லை.


அதிமுக தொண்டர்கள்
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரிவேந்தரின் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்ற ஒரு தகவல் ஏற்கனவே கசிந்து வருகிறது.. இதற்காக மறைமுகமாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் செய்திகள் கசிந்த நிலையில், முதல்வரை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..


ஒருவேளை அதிமுகவுடன் கூட்டணி வைக்க போகிறாரா அல்லது எல்லாமே வெறும் யூகமா என தெரியவில்லை.. ஆனால், திமுக எம்பி ஒருவர் அதிமுக பக்கம் வருவது அதிமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளதாம்.


எச்.ராஜா இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. எச்.ராஜா ஒருமுறை பேசும்போது, "அங்க காலேஜ் நடத்திட்டு வர்றாரே.. அவர்தான் அடுத்து ரெய்டில் மாட்ட போறார்" என்று பொடி வைத்து பேசியிருந்தார்..


எச்.ராஜா யாரை சொல்கிறார் என்றே இதுவரை தெரியவில்லை.. திமுக தரப்பில் நிறைய புள்ளிகள் காலேஜ் வைத்து நடத்தி வருவதால், இதில் பாரிவேந்தரும் அடக்கம் என்றே கருதவேண்டி உள்ளது..


இதை தவிர எஸ்ஆர்எம் பல்கலையில் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து வருவதும் விசாரணை வளையத்தில் உள்ளது.. இவற்றில் இருந்து விடுபடவே கூட்டணி மாறும் முயற்சியா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


இலவச முகாம் கூட்டணி மாறினாலும் சரி.. மாறாவிட்டாலும் சரி... எப்படி பார்த்தாலும், பாரிவேந்தர் தொகுதி மக்களுக்கு செய்த இலவச மருத்துவ முகாம்களாட்டும்...


முக்கியமாக கஜா புயலின்போது தந்த நிவாரணமாகட்டும், அப்புயல் பாதித்த மாவட்ட மக்களின் பிள்ளைகளுக்கு தன் கல்லூரியில் வழங்கிய இலவச படிப்பு ஆகட்டும்.. மக்களால் என்றுமே மறக்க முடியாது..


அந்த வகையில் அவர் எந்த கட்சியில் இருந்தாலும் நல்லதே செய்வார் என்று நம்புவோம்.. ஆனால் காலேஜில் பிள்ளைகள் தற்கொலை விவகாரத்தில் மட்டும் உரிய நடவடிக்கை எடுத்தால் பெற்றவர்களுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்!


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்