தற்போது 471 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழகம் உள்பட 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதேசங்களில் உள்ள 548 மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன.
சீனாவில் தனது கொலைகாரப் பயணத்தைத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது வரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காவு வாங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் 415 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இந்தியாவில் இந்தத் தொற்று நோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 471 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தோற்றுவித்துள்ள, கொரோனா வைரசுக்கான தேசிய சிறப்பு படையானது, மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைடிராக்சிகுளோரோகுயின் (HYDROXYCHLOROQUINE) என்ற மருந்து பொருளை வைரஸ் பாதிப்பு சிகிச்சைக்கு பரிந்துரை செய்துள்ளது. எனினும், மருத்துவர் அளிக்கும் பரிந்துரையின் பேரிலேயே சிகிச்சை அளிக்கப்பெற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 548 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தேவைப்பட்டால், கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு மத்திய அரசு, மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளது.
ஆனாலும் சில பகுதிகளில் மக்கள் தொடர்ந்து வெளியேறி வருவதால் புதுச்சேரி, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிராவைத் தவிர மற்ற பகுதிகளில் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டிப்பாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்களில் பலர் கட்டுப்பாடுகளை மீறி வருவதாகவும், அவர்களுக்கு கொரோனாவின் தாக்கம் குறித்த அச்சம் தெரியவில்லை என்றும் கவலை தெரிவித்துள்ள பிரதமர், விதிகளை கடுமையாகப் பின்பற்றுமாறு மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் மேற்கு வங்கம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் தலா ஒருவர் கொரோனாவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து தொற்று நோய்க்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 468 ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே அமைச்சரவைச் செயலாளர் ராஜிவ் கவ்பா, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அனைத்து கட்டுப்பாடுகளும் கடுமையாக அமல்படுத்தப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தேவைப்பட்டால் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.