அமெரிக்காவில் 22 லட்சம் பேர் பலியாகலாம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்.....
லண்டன்: கொரோனா வைரசால் அமெரிக்காவில் 22 லட்சம் பேர் , இங்கிலாந்தில் 5 லட்சம் பேர் பலியாக வாய்ப்பு உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரசால் உலகம் முழுவதும் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இந்த வைரசின் தாக்கம் அதிகரித்து உள்ளது.
இந்த நாட்டில் வைரசால் பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டுள்ளது.இந்நிலையில் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் கணித உயிரியல் துறை பேராசிரயர் நீல் பெர்குசன் தலைமையிலான குழுவினர் கடந்த 1918 ல் நிகழ்ந்த வைரஸ் காய்ச்சலுடன் தற்போதைய கொரோனா பாதிப்புகளை ஒப்பிட்டுள்ளனர்.
இதன்படி அமெரிக்காவில் 22 லட்சம் பேர் வரையிலும் , இங்கிலாந்தில் 5 லட்சம் பேர் வரையிலும் பலியாக கூடும் என தெரிவித்துள்ளனர்.
ஆய்வு குழுவை சேர்ந்த மற்றொருவரான அஸ்ராகானி கூறுகையில் பொருளாதார ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறி உள்ளார்.
முன்னதாக இங்கிலாந்து பிரதமர் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் அவர்களின் சுகாதாரத்தை காக்கும் வகையில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என கூறி இருந்தார்.
அதே நேரத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசு வேகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என விமர்சனத்திற்கு உள்ளானது.