மூன்று மாநிலம்; 1000 கோடி ரூபாய் சொத்து!' -தினகரனுக்குச் சிக்கலை ஏற்படுத்தப் போகும் புது வழக்கு

டி.டி.வி தினகரனுக்குப் போதாத காலமோ என்னவோ தெரியவில்லை. ஆளும்கட்சியினர் நெருக்கடி ஒருபுறம் மற்றொருபுறம் நீதிமன்றம் எனப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்.


தற்போது அந்நிய செலாவணி மோசடி வழக்கில் 31 கோடி ரூபாய் பணத்தைக் கட்டாமல் இருப்பதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அவரிடம் 1000 கோடிக்கும் மேல் சொத்துகள் இருக்கின்றன. அப்படியிருந்தும் அவரிடமிருந்து அமலாக்கத்துறை அபராத தொகையை வசூலிக்காமல் ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.


டி.டி.வி.தினகரன் 1996-ல் இங்கிலாந்து நாட்டின் பார்க்லே வங்கியில் 1.04 கோடி அமெரிக்க டாலரை முறைகேடாக டெபாசிட் செய்ததாகக் கூறி அவர் மீது அமலாக்கத் துறையினர் அந்நியச் செலாவணி மோசடி வழக்குப் பதிவு செய்தனர்.


இவ்வழக்கு விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் விதிக்கப்பட்ட 31 கோடி அபராத தொகையை வசூலிக்கக் கோரி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத் துறை மற்றும் டி.டி.வி.தினகரன் பதில் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னைஉயர் நீதிமன்றத்தில் சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், "அந்நியச் செலாவணி மோசடி செய்ததாக அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு 1998-ம் ஆண்டு அமலாக்கத்துறை 31 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.


இதை எதிர்த்து அந்நியச் செலாவணி ஒழுங்குமுறை மேல்முறையீட்டு வாரியத்தில் மனுத் தாக்கல் செய்தார் தினகரன். வழக்கை விசாரித்த மேல்முறையீடு வாரியம், அமலாக்கத்துறை பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது.இதை எதிர்த்து, 2017-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தினகரன் மனுத் தாக்கல் செய்தார்.


அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்துத் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த பின்னரும் 31 கோடி ரூபாய் அபராத தொகையை டி.டி.வி.தினகரன் செலுத்தவில்லை.
தற்போது அவருக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளது.


அவரிடம் அபராத தொகை வசூலிக்க தற்போது வரை அமலாக்கத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக தகவல் பெறும் ஆணையத்திடம் அபராதத் தொகை பெறப்பட்டதா என்பது குறித்து மனு அளித்தும் இதுவரை எந்தப் பதிலும் இல்லை.


இதனால் அரசுக்குப் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, டி.டி.வி.தினகரனுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை அமலாக்கத்துறை வசூலிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.


மனுதாரர் சார்பில் வக்கீல் இளையபெருமாள் ஆஜராகி, டி.டி.வி.தினகரனுக்குத் தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களில் 1000 கோடிக்கும் அதிகமான சொத்துகள் உள்ளன. இந்த விவரம் தெரிந்தும் அமலாக்கத்துறை அபராத தொகையை வசூலிக்கவில்லை, ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் குற்றம் சுமத்தினார்.


வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 9-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர். தினகரனுக்குத் தலைவலியை ஏற்படுத்தும் வழக்காக இது இருக்கும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்