'புர்கா'வுக்கு தடை ,இலங்கையில்
இலங்கையில் கடந்தாண்டு ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில் 258 பேர் பலியாகினர். இதையடுத்து பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக இலங்கை அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் பார்லிமென்ட் பாதுகாப்பு குழு சார்பில் நேற்று ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் பாதுகாப்பு விஷயத்தை கருத்தில் வைத்து சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் வகையில் அணியும் புர்கா உடையை எவரும் அணிவதற்கு தடை விதிக்க பரிந்துரை செய்யப்படுகிறது.
முகத்தை மூடும் வகையில் யாராவது உடை அணிந்திருந்தால் உடனடியாக அவற்றை அகற்றும்படி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உத்தரவிட போலீசாருக்கு அதிகாரம் அளிக்கவும் பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும் இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கைக்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.