டெல்லியில் இன்று காலையிலும் கல்வீச்சு- நீடிக்கும் பதற்றம் - அதிவிரைவுப்படையினர் கொடி அணிவகுப்பு
குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக டெல்லி ஷாஹீன்பாக்கில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான பெண்கள் அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தடுத்து நிறுத்த முடியாமல் அரசு இயந்திரம் திகைப்போய் உள்ளது. இந்த நிலையில், வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாஃப்ராபாத் அருகே மாஜ்பூரிலும் நேற்று முந்தினம் போராட்டம் பரவியது. அங்குள்ள மெட்ரோ ரயில் நிலையத்திலும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்றும் தொடர்ந்து வந்தது.
இந்த சூழலில் தான் பா.ஜ.க. எம்.பி. கபில் மிஸ்ரா அப்பகுதிக்கு சென்று போராட்டத்தை கலைந்து செல்லாவிட்டால் போலீஸ் இருக்கிறார்கள் என்று பார்க்க மாட்டோம். உங்களை நாங்களே விரட்டுவோம்” என நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.
சுமார் 3 மணியளவில் பாஜகவை சேர்ந்தவர்கள் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாக பேரணி நடத்துவதாகக் கூறி அங்கு வந்தனர். அவர்களுடன் 2 லாரிகளில் கற்களும் கொண்டு வந்து அப்பகுதியில் குவிக்கப்பட்டன. அதை காவல்துறை தடுக்கவில்லை.
அடுத்த சில நிமிடங்களிலேயே பாஜக ஆதரவாளர்கள் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கற்களை கொண்டு வீசினர். இதில் பெண்கள் உட்பட பலருக்கு மண்டை உடைந்தது.
கல்வீச்சில் ஈடுபட்ட பாஜகவினரை கட்டுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான காவல்துறை, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தி இருக்கிறது. வடகிழக்கு டெல்லியில் இது இரு சமூகங்களிடையேயான மோதலாக வெடித்தது. இம்மோதல்களில் இதுவரை 7 பேர் பலியாகினர். 160க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால், பெரும்பாலான தேசிய மற்றும் தமிழ் ஊடகங்கள் கல்வீசியது, காயமடைந்தது யார்? வன்முறைக்கு காரணமானவர்களை காட்டாமல் வெறும் கல்வீச்சு, வன்முறை, தடியடி என்று மட்டுமே செய்தி வெளியிட்டு உள்ளனர்.