ஆர்பிஐ அனுமதியில்லாமல் கூகுள் பே எப்படி இயங்குகிறது; விளக்கம் அளித்த கூகுள்!
ஆர்பிஐ (இந்திய ரிசர்வ் வங்கி) அனுமதியில்லாமல் கூகுள் பே பணம் பரிவர்த்தனை செயலி இயங்கி வருகிறதா என்று டெல்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை கேள்வி எழுப்பியது.
டெல்லி உயர் நீதிமன்றத்தின் கேள்வியை அடுத்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட விளக்கத்தில், “கூகுள் நிறுவனம் வங்கிகளுடன் கூட்டாளிகளாக இணைந்து தொழில்நுட்ப சேவை வழங்குநராக மட்டுமே உள்ளது. எனவே கூகுள் பே செயலியில் செய்யப்படும் யூபிஐ பரிவர்த்தனை செயல்பாடுகள் மற்றும் செட்டில்மட்களுக்கு கூகுள் பொறுப்பேற்காது” என்று கூறியுள்ளது.
2016-ம் ஆண்டு ஆர்பிஐ கவர்னர் பதவியிலிருந்து ரகுராம் ராஜன் வெளியேறும் முன்பு இந்தியத் தேசிய கொடுப்பனவுகள் கார்ப்ரேஷன் உதவியுடன் யூபிஐ பணம் பரிவர்த்தனை செயலி சேவையைத் தொடங்கி வைத்தார். இந்திய தேசிய கொடுப்பனவுகள் கார்ப்பரேஷன் யூபிஐ செயலியை உருவாக்கியிருந்தாலும் அதனை முழுமையாக ஆர்பிஐ தான் ஒழுங்குமுறைபடுத்தும்.
யூபிஐ செயலி மூலம் இரண்டு வங்கிக் கணக்குகள் இடையில் சில நொடிகளில் பணம் பரிமாற்றம் செய்ய முடியும். இந்தச் சேவையை அறிமுகம் செய்யும் போது அனைத்து வங்கி நிறுவனங்களும் தனித்தனியாக யூபிஐ செயலியை அறிமுகம் செய்தன.
மத்திய அரசு அனைத்து வங்கிக் கணக்குகளையும் ஒன்றிணைத்து ஒரே யூபிஐ செயலியாக பிம்-ஐ அறிமுகம் செய்தது.
இந்த யூபிஐ சேவையைக் கூகுள் பே, அமேசான் பே, ஃபோன்பே, பிம் என பிற வாலெட் நிறுவனங்களும் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு ஒருங்கிணைந்த பணபரிவர்த்தனை சேவையை வழங்குகின்றன.
“இந்தச் சேவையை வழங்குவதற்காக ஆர்பிஐயிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியமில்லை. எங்களது கூட்டணி வங்கி நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப சேவையாக மட்டுமே இதை நாங்கள் வழங்கி வருகிறோம். இந்தியாவில் தரவுகளைச் சேமிப்பது, தரவு பாதுகாப்பு, தங்குதடையின்றி பணப் பரிவர்த்தனை சேவை வழங்குவது போன்றவற்றுக்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்.
மத்திய வங்கியின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கியே இந்தச் சேவையை வழங்கி வருகிறோம்” என்றும் கூகுள் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் நியூஸ்18-க்கு தெரிவித்துள்ளார்.
டெல்லி உயர்நீதிமன்ற ஏப்ரல் 29-ம் தேதி இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.