நீங்க வேறமாதிரி செயல்பட்டால் நானும் வேறு மாதிரிதான்.. பஞ்சாயத்து தலைவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை.

திருச்சி: நீங்கள் வேறு மாதிரி செயல்பட்டால் நானும் வேறு மாதிரி செயல்படுவேன்' என திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு உள்ளாட்சித் தலைவர்களை எச்சரித்துள்ளார்.


திருச்சி மாவட்ட அனைத்து ஊராட்சி மன்ற கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன்.ராஜேந்திரன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் திரண்டு வந்தனர்.


அவர்கள் கலெக்டர் எஸ்.சிவராசுவை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது: இந்தியாவில் உள்ள ஊராட்சிகள் தன்னிச்சையாக செயல்படும் நிலையில் பஞ்சாயத்துராஜ் சட்டம் அமல்படுத்தப்பட்டது.


அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 25.10.1996 முதல் 24.10.2016 வரை ஊராட்சியில் செயல்படுத்தப்படும் கட்டாய கடமையான அடிப்படை பயன்கள் முழுமையாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.


பறிக்கப்பட்ட அதிகாரம்
தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின், ஊராட்சி தலைவர்களுக்கு காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் பறிக்கப்பட்டு கணினி முறையில் பண பரிவர்த்தனை, அதுவும் மூன்றாம் நபருக்கு வங்கிகள் மூலம் தொகை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால்,


ஊராட்சியின் கட்டாய கடமை எனக்கூறும் குடிநீர் வசதி செய்து கொடுத்தல், சாலை அமைத்தல், தெருவிளக்கு, சாக்கடை வசதி போன்ற பணிகள் செய்யும்போது தாமதம் ஆகும்.


அவசர அவசிய காரியங்களுக்கு பணியாளர்களை கூப்பிட்டால் தொகை நேரிடையாக வழங்கினால் மட்டுமே வருகிறார்கள்.
வங்கியில் விரும்பவில்லை
இதனால், அவர்கள் வங்கி மூலம் தொகை வழங்குவதை விரும்பவில்லை.


மேலும் பொதுமக்களுக்கு நேரிடையாக பண பரிவர்த்தனை செய்ய ஊராட்சி மன்ற தலைவர்களால் இயலவில்லை. எனவே, கடந்த 23 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த காசோலையில் ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் நேரிடையாக கையெழுத்திடும் அதிகாரத்தை தாங்கள் பெற்றுத்தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


மாற்ற முடியாது
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் எஸ்.சிவராசு கூறியதாவது:"ஆன்லைன் மூலமான பரிவர்த்தனை திட்டம் என்பது மத்திய அரசு கொண்டுவந்தது.


அதனால் அந்தச் சட்டத்தை மாற்ற இயலாது. எனினும் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி தலைவர்களும் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்வதற்காக வங்கிக் கணக்குகளை செயல்படுத்த நாளை மாலைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.


இதில் என்ன சிக்கல்
ஊராட்சிகள் வங்கிகள் மூலமே பணபரிவர்த்தனை செய்ய வேண்டும் என்பது நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்த நடைமுறை ஆகும்.


வேலை செய்பவர்களுக்கு அவரது வங்கி கணக்கிற்கு தொகை நேரடியாக சென்று விடும். இதில் என்ன சிக்கல் உள்ளது?. எனவே, ஊராட்சிகளில் பணிகள் தாமதம் ஏற்பட வாய்ப்பு இல்லை.


குடிநீர் தட்டுப்பாடு
ஊராட்சி தலைவர் ஒரு வேலை சொன்னால், யாரும் மறுக்கமாட்டார்கள். வங்கி கணக்கு தொடங்குவதில் பிரச்சினை இருந்தால் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.


கோடைகாலம் வந்து விட்டதால் வறட்சியான பகுதியான மணப்பாறை, வையம்பட்டி, உப்பிலியபுரம், மருங்காபுரி, துறையூர் உள்ளிட்ட பகுதியில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.


ஓழுங்காக செயல்படுங்க
அதேபோல் அடிப்படை வசதிகள் மற்றும் குறைகளை உடனுக்குடன் தெரிவித்தால் சீர் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் ஒழுங்காக செயல்பட வேண்டும்.


அனைவரும் ஒழுங்காக செயல்பட்டால் நானும் ஒழுங்காக இருப்பேன். நீங்கள் வேறு மாதிரி செயல்பட்டால் நானும் வேறு மாதிரி செயல்படுவேன்" இவ்வாறு கலெக்டர் கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்