டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கு : கைதானவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி..!
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கில், பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பேரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4, குரூப்-2ஏ, கிராம நிர்வாக அதிகாரிக்கான தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இடைத்தரகராக செயல்பட்ட ஜெயகுமார், காவலர் சித்தாண்டி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குரூப் 4 தேர்வில் சர்ச்சைக்குரிய ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் எழுதி, இடைத்தரகருக்கு தலா 7.5 லட்சம் கொடுத்து தேர்ச்சி பெற்றதாக கைது செய்யப்பட்ட விழுப்புரத்தை சேர்ந்த சிவராஜ் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.