2000 ரூபாய் நோட்டுக்கள் கதி - நிர்மலா சீதாராமன் பதில் என்ன..

மும்பை: வங்கிகள் சமீபகாலமாக, ரூ .2,000 நோட்டுகளை விட ரூ .500 நோட்டுகளை தங்கள் ஏடிஎம்களில் அதிகம் விநியோகிக்கத் தொடங்கியுள்ளன. 2000 ரூபாய் நோட்டுக்களை, புழக்கத்திலிருந்து படிப்படியாக வெளியேற்றும் நடவடிக்கையாக இது, கருதப்படுகிறது.


இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு, ரூ.2,000 மதிப்புள்ள நோட்டுக்களை அச்சிடுவதை நிறுத்தியதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்திருந்தது. அப்போதே இது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


ஆனால், நிதி அமைச்சகத்திடமிருந்து எந்த உத்தரவும் இல்லை என்றாலும், வங்கிகள் தங்கள் ஏடிஎம்களில், வாடிக்கையாளர்களின் வசதிக்காக சிறு மதிப்புள்ள நோட்டுக்களைத்தான் அதிகமாக, நிரப்ப முடிவு செய்துள்ளன என்று கூறப்படுகிறது.


இந்தியன் வங்கி
சில வங்கிகள் ஏற்கனவே தங்கள் ஏடிஎம்களை மறுசீரமைக்கத் தொடங்கியுள்ளன.


அவற்றில் 2000 ரூபாய் நோட்டுக்களே வருவதில்லை. மற்ற வங்கிகளும் இதைப் பின்பற்றும் என்று வங்கிகளின் வட்டாரங்கள் தெரிவித்தன.


இந்தியன் வங்கி ஏற்கனவே தங்கள் ஏடிஎம்களில் ரூ .2,000 நோட்டுகளைப் பயன்படுத்துவதை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ரூ .2,000 நோட்டுகளை தடை செய்ய வங்கிகளுக்கு எந்த அறிவுறுத்தலும் தரப்படவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.


2000 ரூபாய் நோட்டு
ஏடிஎம்கள் மூலம் ரூ .2,000 நோட்டுகளை வினியோகிக்க வேண்டாம் என்று நிதி அமைச்சகம் வங்கிகளைக் கேட்டுள்ளதா என்று கேட்டதற்கு, "இது தொடர்பாக வங்கிகளுக்கு அமைச்சகம் எந்த அறிவுறுத்தலையும் வெளியிடவில்லை.


எனக்குத் தெரிந்தவரை, அத்தகைய அறிவுறுத்தல்கள் எதுவும் வழங்கப்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.


அச்சடிப்பு
ரூ .2,000 நோட்டுக்கு மாற்றுவது மக்களிடையே ஒரு பிரச்சினையாகிவிட்டது. இதன் காரணமாகத்தான், சில வங்கிகள் தங்கள் ஏடிஎம்களில் ரூ.2,000 நோட்டுகளைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டன என்று வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.


தகவல் அறியும் சட்டத்தின்கீழ், ரிசர்வ் வங்கியிடம் பெறப்பட்ட அறிக்கையின்படி,2016-17 ஆம் ஆண்டில் ரூ .2,000 மதிப்புள்ள 3,542.991 மில்லியன் நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. இருப்பினும், 2017-18ம் ஆண்டில், கணிசமாக அச்சிடும் பணி குறைக்கப்பட்டுள்ளது.


111.507 மில்லியன் நோட்டுகள் மட்டுமே அச்சிடப்பட்டன. இது 2018-19 ஆம் ஆண்டில் 46.690 மில்லியன் நோட்டுகளாகக் குறைக்கப்பட்டது.


எதற்காக அறிமுகமானது
2000 ரூபாய் நோட்டுக்ள், தொடர்ந்து சட்டப்பூர்வமாக அமலில் இருந்தாலும், அவை படிப்படியாக அகற்றப்படும் என்பதை இது குறிக்கிறது.


இந்த நடவடிக்கை என்பது 2000 ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்து கருப்பு பணம் உருவாவதை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.


2016ம் ஆண்டு, நவம்பரில் ரூ .1,000 மற்றும் ரூ .500 நோட்டுக்கள் ரத்து செய்யப்பட்டன. கருப்பு பணத்தை குறைப்பதற்கு இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.


ஆனால், 2000 ரூபாய் நோட்டுக்களை அரசு அறிமுகம் செய்து வியப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்போது அந்த நோட்டையும் படிப்படியாக அகற்றுகிறது அரசு. இதற்கு அப்படி ஒரு ரூபாய் நோட்டை ஏன் வெளியிட்டார்கள் என்ற கேள்விக்குத்தான் பதில் தெரியவில்லை.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்