பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. நரேந்திர மேத்தா கட்சியிலிருந்து விலகல்
மகாராஷ்டிரா மாநில பாஜக முன்னாள் எம்.எல்.ஏ., நரேந்திர மேத்தா கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் கீதா ஜெயினிடம் நரேந்திர மேத்தா தோற்றுப்போனது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், "நான் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். கடந்த காலங்களில் எனது நடவடிக்கைகளால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டது.
இப்போது கட்சியில் எனக்கு எந்த இடமும் இல்லை என்பதை உணர்கிறேன். அதனால், கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறக்கிறேன். பாஜக ஏற்றத்திலும் தாழ்விலும் நான் துணை நின்றுள்ளேன். மீரா - பாயந்தர் டவுன்ஷிப்பில் என்னால் இயன்ற நற்காரியங்களை செய்துள்ளேன்.
கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு கட்சி நிறைய வாய்ப்பளித்தது. ஆனால், தற்போது கட்சிப் பணிகள் கடினமாக இருப்பதால் விலகுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.