பொங்கல் கொண்டாட்டத்தில் ரௌடிகள் செய்த கொடூரம்

தஞ்சாவூரில், மது போதையில் ஏற்பட்ட மோதலில் இருவர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டனர். மேலும், கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள், `இன்னும் இதுபோல சில சம்பவங்களைச் செய்தால்தான் தஞ்சாவூரில் நம்பர் ஒன்னாக இருப்போம்' என கத்திக்கொண்டே சென்றதாக அதிர்ச்சியோடு தெரிவிக்கின்றனர் பொதுமக்கள். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வடக்கு வாசல். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர், சக்திவேல். கூலி வேலை செய்துவந்தார். இந்த நிலையில், சக்திவேலும் அவரது நண்பர் இரட்டைப் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த செபஸ்டியன் மற்றும் விளார் சாலை தில்லை நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர், நேற்று இரவு வடக்கு வாசல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பொங்கலைக் கொண்டாடும்விதத்தில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், சூர்யா, வெங்கடேசன் ஆகியோரும் மது அருந்திக்கொண்டிருந்தனர். இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பார் ஊழியர்கள், இரண்டு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்துள்ளனர். அங்கிருந்து நூறு அடி தூரம் சென்ற பிறகு, மீண்டும் மோதல் ஏற்பட்டது. சக்திவேல், செபஸ்டியன், சதீஷ்குமார் ஆகியோரை எதிர்த்தரப்பினர் அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த சக்திவேல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த மோதலில் காயமடைந்த செபஸ்டியன், சதீஷ்குமார் ஆகியோர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில், செபஸ்டியான் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து, சதீஷ்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக, வடக்கு வாசல் ஏவி பதி காலனியைச் சேர்ந்த செல்வகுமார், வெங்கடேசன், சூர்யா ஆகிய மூன்று பேரையும் மேற்கு காவல்நிலைய போலீஸார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். பொங்கல் தினத்தில் நடைபெற்ற இந்த கொலைச் சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அப்பகுதி பொதுமக்கள் சிலர், `` எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டுவருவதுடன் கஞ்சா விற்பனையும் ஜோராக நடைபெறுகிறது. இதனால் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை தவறான பாதைக்குச் செல்கின்றனர். கஞ்சா விற்பனையைத் தடுக்க போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஒரே நேரத்தில் மது மற்றும் கஞ்சாவைப் பயன்படுத்துவதால், போதை தலைக்கேறி என்ன செய்வதெனத் தெரியாமல் பலரிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். நேற்று, இரு தரப்புக்கும் ஏற்பட்ட பயங்கர மோதலில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் செல்வகுமார் டீம் தாக்கியுள்ளது. அவர்களுக்கு 20 முதல் 25 வயதுக்குள்தான் இருக்கும். கொலைச் சம்பவத்தை முடித்துவிட்டுச் செல்லும்போது, `இதுபோல சில சம்பவங்களைச் செய்தால்தான் தஞ்சாவூரில் நாம நம்பர் ஒன்னா இருக்க முடியும்' எனக் கத்தி கொண்டே ஓடினார்கள். பல ஆண்டுகளுக்கு முன்னர், எங்கள் பகுதியில் அதிக அளவில் குற்றச் சம்பவங்கள் நடக்கும். பின்னர் காவல்துறையினர் எடுத்த நடவடிக்கையால் அவை குறைந்துவிட்டன. சில ஆண்டுகளாக மீண்டும் குற்றச் சம்பவங்கள் தலைதூக்கத் தொடங்கிவிட்டன. போலீஸின் மெத்தன நடவடிக்கையே இதற்குக் காரணம். எங்கள் பகுதியைப் பற்றி நன்கு அறிந்தவர் இன்ஸ்பெக்டர் சுகுமார். அவர், எஸ்.ஐயாக இருந்து இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றுவிட்டார். ஏவி.பதி காலனியில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார். அவர் வேறு காவல்நிலையத்துக்குச் சென்றுவிட்டதால், ரௌடிகளின் அட்டகாசம் அதிகரித்துவருகிறது. வரும் நாள்களில் போலீஸார் நேரடிக் கண்காணிப்பில் ஈடுபட்டால்தான் குற்றச் செயல்களைத் தடுக்க முடியும்" என்கின்றனர் வேதனையுடன்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)