மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் காட்டம்

மதுரை: உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்யாத தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கறிஞர்கள் முறையீடு ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் நேற்று வழக்குகளை விசாரிக்கத் துவங்கினர். அப்போது ஏராளமான வக்கீல்கள் ஆஜராகி, ‘‘உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. முறையாக வாக்குகள் எண்ணப்படவில்லை. பல இடங்களில் ஆளும்கட்சியினருக்கு ஆதரவாக முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் நடந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும். பல இடங்களில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்றனர். அப்போது சிலர், ‘‘விடுமுறை கால நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கில் வெளியிட்ட உத்தரவில், ஐகோர்ட் கிளைக்கு உட்பட்ட மாவட்டங்களில் நடந்த வாக்கு எண்ணிக்கை தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஜன. 3ம் தேதி மாலை 5 மணிக்குள் ஐகோர்ட் கிளை பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டுமென தெரிவித்திருந்தது. ஆனால், இந்த நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்படவில்லை’’ என்றனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘முந்தைய உத்தரவுப்படி வாக்கு எண்ணிக்கை தொடர்பான சிசிடிவி காட்சிகளை உடனடியாக பகல் 12.30 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இதுதொடர்பான விசாரணை பிற்பகலில் நடக்கும்’’ என்றனர். பின்னர் நேற்று பிற்பகலில் நீதிபதிகள் விசாரித்தனர். மாநில தேர்தல் ஆணையம் கூடுதல் அவகாசம் கோரியது கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், தேர்தல் ஆணைய வக்கீல் ராஜா கார்த்திகேயன் ஆகியோர் ஆஜராகி, ‘‘சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்வதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளோம்’’ என்றனர். அப்போது நீதிபதிகள், ‘‘இந்த நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றுவதில் ஏன் காலதாமதம்? இரண்டு நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. போதிய கால அவகாசம் வேண்டும் என்றால் உடனடியாக அப்பீல் செய்திருக்கலாமே’’ என்றனர். இதற்கு அரசுத் தரப்பில், ‘‘நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மேலும் 15 நாள் அவகாசம் கேட்டு இந்த நீதிமன்றத்தில் மனு செய்துள்ளோம்’’ என கூறப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘‘இந்த நீதிமன்றத்தின் உத்தரவு காகிதத்தில் தான் உள்ளதா? அரசின் நடவடிக்கை நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் உள்ளது’’ என்றனர். அரசுத் தரப்பில், ‘‘மதுரை மாவட்டத்தில் மட்டும் 509 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. இவற்றில் பதிவான காட்சிகளை பதிவிறக்கம் செய்ய தொழில்நுட்ப ரீதியாக போதுமான கால அவகாசம் வேண்டும்’’ என கூறப்பட்டது. இதையடுத்து, மனு மீதான விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மாநில தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் இன்று தொடங்கியது. அப்போது உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான சிசிடிவி காட்சிகளை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதில் காலதாமதம் செய்வது ஏன்? என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய கால தாமதம் ஆவது ஏன்? என வினவியது. அத்துடன் சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்யாதது தேவையில்லாத சந்தேகங்களுக்கு விழிவகுக்கும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சிசிடிவி பதிவுகள் 3 நாளாக பதிவிறக்கம் ஆவதாக தேர்தல் ஆணையம் கூறுவது நம்பும் படி இல்லை என்றும் நீதிபதகள் தெரிவித்தனர். அதோடு மட்டுமல்லாமல் வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கேட்ட ஆணையத்தின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)