வெள்ளகோவில் : ஆதரவற்ற ஒருவரது சடலத்தை, போலீசாரே சுமந்து சென்று, மயானத்தில் அடக்கம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகேயுள்ள கருந்தேவிக்கவுண்டன்புதூரை சேர்ந்தவர் முருகேசன், 45. திருமணமாகாதவர். பெற்றோர், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர்.கடந்த, 18ம் தேதி, முருகேசன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. வீடு, உள்தாழிடப்பட்டிருந்தது. வெள்ளகோவில் போலீசார், வீட்டுக்கதவை உடைத்து பார்த்தபோது, முருகேசன் இறந்துகிடந்தார். அருகில், மின் ஒயர் இருந்தது. மின்சாரம் தாக்கி, இரண்டு, மூன்று நாட்கள் முன்பே, அவர் இறந்திருக்கலாம் என்று தெரியவந்தது. அழுகிய நிலையில் இருந்த அவரது உடல், கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேதப்பரிசோதனைக்குப் பின், முருகேசன் உடலை வாங்க உறவினர்கள் யாரும் வராததால், கடந்த 21ம் தேதி, வெள்ளகோவில் சிறப்பு எஸ்.ஐ., பழனிசாமி, ஏட்டு ரமேஷ் ஆகியோர், ஜீவசாந்தி அறக்கட்டளையினருடன் இணைந்து, ஆத்துப்பாலத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர்.ஜீவசாந்தி அறக்கட்டளை நிறுவனர் சலீம் கூறுகையில், ''வெள்ளகோவிலில் இறந்தவர் உடலை, நாங்களே அடக்கம் செய்ய முன்வந்தோம். எஸ்.ஐ.,யும், ஏட்டும் எங்களுடன் இணைந்து, உடலை, மயானத்துக்கு சுமந்து சென்று, தங்கள் கைகளாலேயே அடக்கம் செய்தனர். இது, போலீசாரின் மனிதநேயத்துக்குச் சான்றாக உள்ளது' என்றார்.போலீசாரின் இந்தச்செயல், சமூக வலைதளங்களில், வைரலாகியுள்ளதோடு, பாராட்டுகளும் குவிந்து வருகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)