கவர்னர் கிரண்பெடி தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைத்த மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் புதுவை தலைமை தபால் நிலையம் அருகில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செல்வகணபதி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த காலத்தில் வேலை வாய்ப்புகள், பொருளாதார வளர்ச்சி, ஏற்றுமதி போன்றவை அதிகமாக இருந்தது. கட்டுமான பணிகள் அதிக அளவில் நடைபெற்றது. அரசு வேலைவாய்ப்பு தடையில்லாமல் கிடைத்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்திற்கு குறையவே இல்லை. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைத்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அனைத்து துறை வளர்ச்சிகளிலும் கவனம் செலுத்தியது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க.வினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து தேர்தலில் வெற்றி பெற்றனர். தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் எதையுமே அவர்கள் நிறைவேற்றவில்லை. பிரதமர் மோடி 5 ஆண்டுகளில் 72 நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். ஒரு பிரதமர் வெளிநாட்டுக்கு சென்று வரும்போது, அந்த நாட்டின் முதலீடு, அங்குள்ள தொழிற்சாலைகள் நமது நாட்டுக்கு வரும். ஆனால் இவர் சென்றுவந்த பிறகு எதுவும் வந்ததுபோல் தெரியவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் உணவு பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக நிறைவேற்றினோம். கிராமப்புற மக்களுக்கு 75 சதவீதமும், நகர்புற மக்களுக்கு 60 சதவீதமும் உணவு வழங்கினோம். தொழிற்சாலைகள் சிறப்பாக செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகிறது. பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது. நடவடிக்கை எடுப்போம் என்று சொல்கின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அடுத்தபடியாக நாம்தான் அதிக சதவீத வாக்குகள் பெற்றுள்ளோம். எனவே பா.ஜ.க.வின் மக்கள் விரோத போக்கை காங்கிரஸ் கட்சிதான் எதிர்க்க வேண்டும். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருடன் இணைந்து பணியாற்ற வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த விடாமல் கவர்னர் கிரண்பெடி தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். அதனையும் மீறி நாம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதனை மக்களிடம் எடுத்து கூற வேண்டும். ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்க ரூ.154 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி இருந்தாலும் அரிசி போட முடியாத வகையில் கவர்னர் தடை செய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் விஜயவேணி எம்.எல்.ஏ., மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!