எஸ்.ஐ.யின் காட்டுமிராண்டி செயலைக் கண்டித்து ஒட்டுமொத்தப் பத்திரிகையாளர்களும் களமிறங்கியுள்ளனர்.

"பத்திரிகையாளர்களின் அடிப்படை உரிமைகளை நசுக்குவதில் எங்களை மிஞ்ச யாருமில்லை "என்பதனை உணர்த்தும் விதமாக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரின் செவிப்பறையை கிழித்து, பூட்ஸ் காலால் ஏறி மிதித்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார் எஸ்.ஐ.ஒருவர். காவல்துறையின் உயரதிகாரிகள் மௌனம் காத்த வேளையில், எஸ்.ஐ.யின் காட்டுமிராண்டி செயலைக் கண்டித்து ஒட்டுமொத்தப் பத்திரிகையாளர்களும் களமிறங்கியுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் கடையம் எழில்நகரை சேர்ந்தவர் பாரதிராஜன். இவர் வசந்த் தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியாற்றி வருகின்றார். பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் கோடிக்கணக்கில் மோசடி செய்த ஒருவனிடம் போலீசார் டீல் பேசுவதாக தகவல் வர, மற்றொரு நாளிதழ் செய்தியாளருடன் இணைந்து செய்தி சேகரிப்பதற்காக கடந்த வியாழனன்று மதியம் 3 மணி வாக்கில் காவல்நிலையம் அருகில் சென்றிருக்கின்றார். தகவல் கூறிய சோர்ஸூடன் செய்தியாளர் பாரதிராஜன் பேசிக்கொண்டிருந்ததை அறிந்த காவல்நிலைய எஸ்.ஐ.சின்னத்துரை,"என்ன இங்க நிற்கீறீங்க இங்கே எல்லாம் நிற்கக் கூடாது இடத்தை காலி செய்யுங்க..!" என எடுத்த எடுப்பிலேயே எகிற, செய்தியாளரும் தான் இன்னார் என அறிமுகப்படுத்திக் கொண்டு, " செய்தி சேகரிக்க இங்கு வந்துள்ளேன்.!" என்பதனை விளக்கிக் கூற, " செய்தி சேகரிக்க இங்க வரக்கூடாதுல." என எஸ்.ஐ.கோபத்தில் குதிக்க, " ஏன் சார்..? செய்தி சேகரிக்கக் கூடாது என சொல்வதற்கு உங்களுக்கு அதிகாரமில்லை." எனப் பதிலுக்கு செய்தியாளர் கூறியது தான் தாமதம் அவருடைய செவிப்பறையில் ஓங்கி அறைந்தவர், " எதிர்த்துப் பேசுகிறீயா.?" எனக் கேட்டுக்கொண்டே உதைத்து தள்ளியவர் பூட்ஸ் காலால் ஏறியும் மிதித்துள்ளார் எஸ்.ஐ.சின்னத்துரை. அத்துடன் விடாமல் செய்தியாளரை தரத்தரவென இழுத்து காவல் நிலையத்திற்குள் கூட்டி சென்று அங்கேயும் தாக்கியுள்ளார் அவர். தகவலறிந்த பத்திரிகையாளர்கள் ஒன்று சேர இரவு எட்டுமணிக்குப் பிறகே விடுவிக்கப்பட்டுள்ளார் செய்தியாளர் பாரதிராஜன். காவல்துறையினர் தாக்கியதில் காயம் அதிகம் ஏற்பட்ட நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் செய்தியாளர் பாரதிராஜன். இதேவேளையில், நெல்லை மாவட்ட பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து, நடந்த சம்பவங்களை தீர விசாரித்து சம்பந்தப்பட்ட எஸ்.ஐ.சின்னத்துரை மீது வழக்குப்பதிய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை மாவட்ட காவல்துறை. இது இப்படியிருக்க, செவிப்பறை பலமாக தாக்கப்பட்டு, கேட்கும் திறன் குறைந்துள்ளதாக மருத்துவ அறிக்கை வெளியாக ஒட்டுமொத்தப் பத்திரிகையாளர்களும் போராட்டத்தில் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!