கட்டுமானத் தொழிலாளர்களுக்குரூ.99.58 லட்சம் மதிப்பில் உதவித்தொகை: அமைச்சர் நிலோபர் கபீல் தகவல்

கட்டுமானத் தொழிலாளர்களுக்கும், அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கும் ரூ.99.58 லட்சம் மதிப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தெரிவித்தார். தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை, செனாய் நகர் அம்மா அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், அவர் பேசியதாவது: ''தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்டம் உருவாக்கப்பட்டது. இவ்வாரியத்தில் உறுப்பினராக 18 வயது பூர்த்தியான மற்றும் 60 வயதுக்குட்பட்ட அமைப்புசாராத் தொழிலாளர்கள் 53 வகையான கட்டுமானத் தொழில்கள் மற்றும் 69 வகையான அமைப்புசாராத் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்கள் இவ்வாரியங்களில் உறுப்பினராகப் பதிவு பெறவும் நலத் திட்ட உதவிகள் பெறவும் தகுதியுடையவராகிறார்கள். அமைப்புசாராத் தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு விபத்து மரணம், விபத்து ஊனம், இயற்கை மரணம், ஈமச் சடங்கு உதவித்தொகை, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, ஓய்வூதியம்/முடக்க ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பணியில் ஈடுபட்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டு இறக்கும் தொழிலாளர்களுக்கான விபத்து மரண நிதி உதவி ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. கட்டுமானத் தொழிலாளர்களின் பணியிடம் தேடி சுகாதார சேவைகள் வழங்கும் வகையில் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் நகரும் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் 88,056 தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 1000 தொழிலாளர்கள் தங்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் எழிச்சூர் மற்றும் தையூர் கிராமங்களில் தூங்கும் அறைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் அம்மா உணவகங்களில் 40,130 பயனாளிகள் விலையில்லா உணவு அருந்திவுள்ளனர். சென்னை மாவட்டத்தில் மட்டும் 17 அமைப்புசாராத் தொழிலாளர்கள் நல வாரியங்களில் 31.10.2019 வரையிலான காலத்தில் 72 ஆயிரத்து 715 தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டு, 82 ஆயிரத்து 436 பயனாளிகளுக்கு, ரூ.24 கோடியே 56 லட்சம் உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதியாண்டு காலத்தில் சென்னை மாவட்டத்தில் 17 அமைப்புசாராத் தொழிலாளர்கள் நல வாரியங்களில் 2 ஆயிரத்து 308 தொழிலாளர்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டு, 4 ஆயிரத்து 997 பயனாளிகளுக்கு, ரூ.2 கோடியே 46 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் தலா ரூ. 2,177/- மதிப்புள்ள பாதுகாப்புக் காலணிகள், பாதுகாப்புத் தலைக்கவசம், பளிச்சிடும் மேலங்கி, கையுறைகள் மற்றும் பாதுகாப்புக் கண்ணாடிகள் ஆகிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2,238 கட்டுமானத் தொழிலாளர்களுக்கும், மேலும் 3,983 அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, விபத்து மரணம் உதவித்தொகை இயற்கை மரணம் உதவித்தொகை என மொத்தம் ரூ.99.58 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களைப் பெற்று நீங்கள் எல்லாம் சிறப்பாக வாழவும், பணியிடத்தில் பாதுகாப்பாகப் பணிபுரிய வேண்டும்''. இவ்வாறு அமைச்சர் நிலோபர் கபீல் பேசினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)