மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா எம்.பி அரவிந்த் சாவந்த்.

அரவிந்த் சாவந்த் சிவசேனா மகாராஷ்டிரா மத்திய அமைச்சர் மும்பை: 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜ 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்றொரு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 44 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் வெற்றி பெற்றன. பா.ஜ-சிவசேனா கூட்டணிக்கு தேர்தலில் பெரும்பான்மை கிடைத்த போதிலும் முதல்வர் பதவி பிரச்னை காரணமாக புதிய அரசு அமையவில்லை. முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள சிவசேனா வலியுறுத்தியது. ஆனால் பா.ஜ உடன்பட மறுத்து விட்டது. இந்த மோதலை தொடர்ந்து முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கடந்த வெள்ளிக்கிழமை பதவியை ராஜினாமா செய்தார். மாற்று ஏற்பாடு செய்யும் வரை காபந்து முதல்வராக செயல்படுமாறு அவரை மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கேட்டுக் கொண்டார். இந்த நிலையில், தற்போதைய 13வது மகாராஷ்டிரா சட்டசபையின் ஆயுள் காலம் சனிக்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்குவந்தது. அதுவரை எந்த கட்சியும் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரவில்லை. அதையடுத்து காலையில் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார். மாலையில் மாநில அரசின் அட்வகேட் ஜெனரல் அசுதோஷ் கும்பகோனியை ஆளுநர் ராஜ்பவனுக்கு அழைத்தார். அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அட்வகேட் ஜெனரலுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார். இதனால் ஆளுநர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக ஆளுநர் நேற்று முன்தினம் இரவு பா.ஜவிடம், ஆட்சி அமைக்க விருப்பம் உள்ளதா? ஆட்சி அமைக்க முடியுமா? என்று கேட்டு கடிதம் அனுப்பினார். பா.ஜ சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தேவேந்திர பட்நவிசுக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டது. புதிய அரசு அமைப்பதில் சிவசேனா ஒத்துழைக்காததால் மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரப்போவதில்லை என்று முதல்வர் பட்நவிஸ் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து முடிவை தெரிவித்தார். இதற்கிடையே, சிவசேனா தலைமையில் அமைய இருக்கும் அரசுக்கு ஆதரவு கொடுப்பது குறித்து முடிவு செய்ய இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அதன் தலைவர் சரத்பவார் தலைமையில் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களும் புதிய அரசு அமைய ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் இதில் கட்சியின் மேலிடத்தின் முடிவுக்காக காத்திருக்கின்றனர். பாஜ மறுத்ததால் அடுத்தகட்டமாக சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் பகத் சிங் நேற்று மாலை அழைப்பு விடுத்தார். சிவசேனா தயார் என்றால், அடுத்த 24 மணி நேரத்தில் ஆட்சி அமைக்க வேண்டுமெனவும் அவர் கெடு விதித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறினால் மட்டும் கூட்டணி என தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத்பவார் நிபந்தனை விதித்திருந்தார். இந்த அடுத்தடுத்த திருப்புமுனைகளால் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், சிவசேனா கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்த் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய கனரகத் தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சராக எம்.பி. அரவிந்த் சாவந்த் இருந்தார். இதன் மூலம் பாஜக-சிவசேனா கூட்டணி முறிந்தது தெரியவந்துள்ளது. மகாராஷ்டிராவில் பாஜகவுடனான கூட்டணியை முறிக்க வேண்டும் என்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிபந்தனையை சிவசேனா ஏற்றது. சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்த முடிவை இன்று காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அறிவிக்க வாய்ப்புள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!