புழல் ஏரி தூர்வாருவது எப்போது?பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் ஏரி புனரமைப்பு பணிகளை முழுமையாக முடிக்காமல் ஒப்பந்த நிறுவனம் பாதியில் ஓட்டம் பிடித்துள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீர் ஆதாரத்தை தீர்க்கும் புழல் ஏரி 3,300 மில்லியன் கன அடி கொண்டது. பல ஆண்டுகளாக புழல் ஏரி தூர்வாரப்படவில்லை. இதனால் ஏரியில் 40 சதவீதம் கொள்ளளவு மண் படிமங்களாக காணப்படுகிறது. இதனால், ஏரிகளில் வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் முழு நீரையும் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஏரிகளை தூர்வாரி, அதன் மூலம் 0.5 கூடுதல் டிஎம்சி நீரை சேமித்து வைக்கவும் திட்டமிடப்பட்டது. இதற்காக, தமிழக அரசு சார்பில் கடந்தாண்டு நவம்பர் 22ம் தேதி ₹9 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, டெண்டர் விடப்பட்டது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி தூர்வாரும் பணியை முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார். ஆனால், ஏரியில் சுற்றுச்சுவர் பலப்படுத்தப்பட்டு, கரையையொட்டி சாலை மட்டுமே அமைக்கப்பட்டது. ஆனால், ஜெனரேட்டர் அறை, காப்பாளர் அறை எதுவும் அமைக்கப்படவில்லை. மேலும், கரைகளை பலப்படுத்தும் பணியின் போது, கரையோரத்தில் மண் கொட்டப்பட்டு, பணிகள் நடந்தது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள மண்ணை எடுத்து செல்லவில்லை. அந்த மண் கரைகளில் 10 அடி தூரம் வரை கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அரைகுறையாக நடந்துள்ள நிலையில், ஒப்பந்த நிறுவனத்துக்கு பில் தொகை செட்டில் செய்யப்பட்டு விட்டது. இதனால், அந்த நிறுவனம் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளாமல் பாதியில் முடித்து கொண்டது. இந்த சம்பவம் பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏரி தூர்வாருவது எப்போது? புழல் ஏரியை தூர்வாருவதன் மூலம் 1 கோடியே 44 லட்சத்து 58 ஆயிரத்து 828 கியூபிக் மீட்டர் மணல் அள்ளப்படுகிறது. இந்த மணல் விற்பனை செய்வதன் மூலம் 173 கோடி வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது ஏரியில் தண்ணீரின்றி முற்றிலும் வறண்டு விட்டதால் எளிதாக தூர்வார முடியும். ஆனால், இந்த பணிகளை மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த நிறுவனம் பணம் கட்டினால் மட்டுமே தூர்வாரும் பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை கூறியுள்ளது. ஆனால், அந்த நிறுவனம் பணம் கட்டாததால் தூர்வாரும் பணி தற்போது வரை தொடங்கவில்லை. இந்த நிலையில், அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், இப்போது வரை பணிகள் தொடங்கப்படாததால் கூடுதல் நீரை சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்