திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து காட்பாடி அழைத்து வரப்பட்ட முகிலன் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு காரணமான காவல்துறை உயரதிகாரிகள் தொடர்புடைய வீடியோ ஆதாரங்களைச் சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டார். பின்னர், அன்றிரவு சென்னையிலிருந்து நாகர்கோயிலுக்கு ரயிலில் புறப்பட்ட அவர் திடீரென மாயமானார். முகிலனைக் கண்டுபிடித்துத்தரக்கோரி அவரது மனைவி பூங்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், காணாமல்போன முகிலனைத் திருப்பதி ரயில் நிலையத்தில் நேற்றிரவு ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் மீட்டனர். நேற்றிரவு 11 மணிக்குமேல் காட்பாடி ரயில் நிலையத்துக்கு முகிலன் அழைத்துவரப்பட்டார். அவரை யாரிடம் ஒப்படைக்கவேண்டும் என்று ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, வேலூர் டவுன் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாரிடம் நள்ளிரவு 12 மணியளவில் முகிலன் ஒப்படைக்கப்பட்டார். தகவலறிந்த முகிலனின் ஆதரவாளர்கள் பலர் ரயில் நிலையத்தில் திரண்டனர். போலீஸாருடன் செல்ல முகிலன் மறுத்தார். ரயில் நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவியதால் போலீஸார் அவரை தரதரவென வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். முகிலனின் ஆதரவாளர்கள், "தமிழக அரசே... தமிழக அரசே... விடுதலை செய்... விடுதலை செய்... வஞ்சிக்காதே வஞ்சிக்காதே'' என்று கோஷம் எழுப்பினர். போலீஸார், முகிலனை காரில் ஏற்றினர். காருக்குள் அமர மறுத்த முகிலன் திமிரியெழுந்து "என்னைக் கடத்திக்கிட்டு போறாங்க'' என்று சத்தமாக கூறினார். போலீஸார், அவரை அமுக்கி காருக்குள் அமரவைத்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச்சென்றனர். அதைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் முகிலன், விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்படலாம் எனக் கூறப்பட்ட நிலையில் அதிகாலை அளவில் அவர் சென்னை அழைத்து வரப்பட்டார்.