விடைபெற்ற டி.கே.ராஜேந்திரனுக்கு பிரிவு உபசார விழா 'சோதனைகளை சாதனைகளாக்கி மன நிறைவோடு செல்கிறேன்”

ஓய்வு பெற்ற டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு நேற்று மாலை 4 மணியளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் பிரிவு உபசார விழா நடந்தது. இந்த விழாவுக்கு டி.கே.ராஜேந்திரன் தனது மனைவி ரோகிணி மற்றும் குடும்பத்தினருடன் வருகை தந்தார். அப்போது உயர் அதிகாரிகள் அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர். இந்த விழாவில், புதிய டி.ஜி.பி.யாக பொறுப்பேற்ற, ஜே.கே.திரிபாதி தனது மனைவி அனுஜாவோடு பங்கேற்றார். விழாவின் தொடக்கத்தில், போலீஸ் அணிவகுப்பு மரியாதை நடந்தது. டி.கே.ராஜேந்திரன் திறந்த ஜீப்பில் சென்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், ஜே.கே.திரிபாதி, டி.கே.ராஜேந்திரனுக்கு நினைவு பரிசு வழங்கினார். போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வரவேற்று பேசினார். டி.கே.ராஜேந்திரன் தனது ஏற்புரையில் உருக்கமாக பேசினார். அவர் பேசியதாவது:- சட்டத்துக்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டு எனது பணியை செய்தேன். முழு மன நிறைவோடு நான் விடை பெறுகிறேன். கடந்த 3 ஆண்டுகள் தமிழக காவல்துறை பல்வேறு சோதனைகளை சந்தித்தது. இந்த சோதனைகளை கூட சிறப்பாக செயல்பட்டு சாதனைகளாக்கி காட்டினோம். ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகம் முழுவதும் நடந்தது. அப்போது, சட்டம்ஒழுங்கு சிறப்பாக காப்பாற்றப்பட்டது. 'ஒக்கி' , 'கஜா' போன்ற புயல்களால் தமிழகம் பல்வேறு பேரிடர்களை சந்தித்தது. இதுபோன்ற பல்வேறு இடையூறுகளைக்கூட சவாலாக ஏற்று சிறப்பாக செயல்பட்டோம். கடந்த 3 ஆண்டுகளில் ஏற்கனவே உள்ள செயல்திட்டங்களை செம்மைப்படுத்தினோம். அதோடு புதிய செயல்திட்டங்களையும் கொண்டு வந்தோம்.நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் செயல்படும் போலீஸ் நிலையங்கள் வலுவூட்டப்பட்டு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டன. கடலோர காவல்படைக்கும் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டது. மகளிர் மற்றும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்க சிறப்பு பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. போலீஸ்காரர் முதல் டி.ஜி.பி. வரையில் சரியான நேரத்தில் உரிய பதவி உயர்வுகள் கொடுக்கப்பட்டது. பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிய 230 போலீசாருக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டது.இந்த நேரத்தில் உங்களுடைய மூத்த தலைவர் என்ற முறையில் சில அறிவுரைகளை வழங்குகிறேன். மக்கள் பணிக்காகத்தான் நாம் உள்ளோம். எனவே மக்கள் பணியை சிறப்பாக செய்ய வேண்டும். மனு கொடுக்க வருபவர்களிடம் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் அதிகாரிகளிடம் பணிவோடு நடந்து கொள்ள வேண்டும். என்னுடைய பணி காலத்தில், எனக்கு உறுதுணையாக செயல்பட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். விழாவின் இறுதியில் ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நன்றி தெரிவித்து பேசினார். விழாவில் டி.ஜி.பி.க்கள் ஜாபர்சேட், பிரதீப் வி.பிலீப், சி.கே.காந்திராஜன், விஜயகுமார், தமிழ்செல்வன், சைலேந்திரபாபு, கரண்சின்கா உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி.க்கள் வைகுந்த், அலெக்சாண்டர், சேகர், டோக்ரா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)