20 இடங்கள்: மதுரையில் டெங்கு பாதிக்கும்

மதுரை : பருவமழை காலங்களில் மதுரையை மிரட்டும் டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. டெங்கு அதிகம் பாதித்த இருபது 'ஹாட்ஸ்பாட்' இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென் மேற்கு பருவம் துவங்கி உள்ள நிலையில், டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இன்று முதல் தீவிரமாக களம் இறங்க மாநகராட்சி சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. ஏனென்றால் கடந்த ஆண்டுகளில் இக்காலக்கட்டத்திலேயே மதுரையை டெங்கு காய்ச்சல் வெகுவாக மிரட்டி உள்ளது. மதுரை நகரில் மட்டும் கடந்த 2017 ம் ஆண்டு 2 ஆயிரம் பேரும், கடந்த ஆண்டு 250 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். இரு ஆண்டுகளிலும் தலா 20 பேர் உயிரிழந்தனர். இக்கசப்பான அனுபவங்களை கொண்டு மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் டெங்கு அச்சுறுத்தல் அதிகம் உள்ள 20 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளுக்கு டெங்கு 'ஹாட்ஸ்பாட்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது. நகர்நல அலுவலர் சரோஜா கூறியதாவது: பொதுவாக மழைக்காலங்களில் டெங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம். பொதுமக்கள் கவனமாக தண்ணீரை கையாள வேண்டும். டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசு நன்னீரில் தான் உற்பத்தியாகும். எனவே தண்ணீர் இருக்கும் பாத்திரங்கள், தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். கண்ட இடங்களில் தண்ணீரை கவிழ்க்க கூடாது. வீடுகள் அருகே தண்ணீர் தேங்கா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை நாட வேண்டும். இந்த ஆண்டில் இதுவரை ஒருவருக்கு கூட டெங்கு பாதிப்பு ஏற்படவில்லை. இந்நிலை தொடர தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகிறோம். கொசு ஒழிப்பு பணி மீண்டும் தீவிரப்படுத்தப்படும். தினமும் குறிப்பிட்ட பகுதிகளில் மெகா துப்புரவு பணி நடக்கும். டெங்கு 'ஹாட்ஸ்பாட்' பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், என்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)