பிளாக் மெயிலரான இளம் கொத்தனார்ஸ்..! நாடக காதல் விபரீதம்

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே இளம் பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி அவருடன் எடுத்துக் கொண்ட நெருக்கமான புகைபடங்களை காட்டி மிரட்டி நகை பணம் பறித்த இரு கொத்தனார்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாடக காதலில் விழுந்ததால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.


 


நெல்லை மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணத்துக்கு முந்தைய காதலனால் தனது மணவாழ்க்கை கேள்விக் குறியாகி விட்டதாக சேரன்மகாதேவி ஏ.எஸ்.பி பிரதீப்பிடம் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்தார்.


 


முக்கூடல் அடுத்த கண்டப்பட்டியைச் சேர்ந்த கொத்தனார் சாலமோன் என்பவருடன் அந்த பெண் திருமணத்துக்கு முன்னதாக பழகி உள்ளார். அந்த பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி நெருங்கி பழகிய சாலமோன், இருவரும் நெருக்கமாக இருக்கும் போது செல்போனில் படம் எடுத்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு வீட்டில் வேறொருவரை திருமணம் செய்த போது மவுனமாக இருந்த சாலமோன், திருமணத்திற்கு பின்னர் அந்த பெண்ணிடம் காதலித்த போது தாங்கள் நெருக்கமாக எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க தொடங்கியுள்ளான். பணமில்லை என்ற நிலை வந்ததும் அந்த பெண்ணிடம் இருந்து தங்கச் சங்கிலி, கம்மல் என சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளைப் பெற்றுள்ளான். இந்த விவரத்தை அறிந்த அவனது கூட்டாளிகளான ஜான்சன், மனோ சேட் ஆகியோரும் வீடியோவைக் காட்டி அந்த பெண்ணை மிரட்டத் தொடங்கியுள்ளனர்.


 


என்ன செய்வதென்று தெரியாமல் அந்த பெண் விழிபிதுங்கிய நிலையில், மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அவளது கணவன் வீட்டில் இருந்து வெளியே அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகின்றது. இருந்தும் விடாமல் சாலமன் கும்பல் அந்த பெண்ணிடம் மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதால் விரக்தி அடைந்த அந்த பெண் முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இழுத்தடித்துள்ளனர். இதையடுத்து சேரன்மாதேவி ஏ.எஸ்.பி யிடம் புகார் அளித்துள்ளார்.


 


அவரது உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்த முக்கூடல் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சாலமோனின் நாடகக் காதலில் விழுந்த அந்த பெண் , நெருக்கமாக இருந்த வீடியோக்களும், வீடியோகாலில் பேசிய வீடியோப் பதிவுகளும் அவனிடம் இருப்பது தெரியவந்தது.


 


கொத்தனாராக இருந்து பிளாக்மெயிலராக மாறிய சாலமோனை போலீசார் தேடிவரும் நிலையில் அவனது கூட்டாளி ஜான்சன் என்பவன் ஏற்கனவே ஒரு பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் கைதாகி ஜெயிலில் இருப்பது தெரியவந்தது. மற்றொரு கூட்டாளியான மனோசேட்டை போலீசார் தேடிவருகின்றனர்.


 


பெண்கள் கூடுமானவரை காதலர்களுடன் திருமணத்துக்கு முன்பு நெருக்கமாக புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுத்துக் கொள்வதை தவிர்க்கவில்லையெனில் அது வில்லங்கத்தை வீட்டிற்கு வரவழைத்துவிடும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)