போதை தடுப்புக்கான நடவடிக்கை (Drive Against Drugs) என்ற திட்டத்தின் மூலம் சென்னை பெருநகரில் குட்கா, கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும்.
விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வோரை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அவ்வகையில், சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்கு சாலிகிராமத்தில் உள்ள பகுதியில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பதுக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலிஸார், 377 கிலோ குட்கா பொருட்கள், ஒரு கார் மற்றும் 1 இருச்சக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததோடு திருவான்மியூரைச் சேர்ந்த சரவணன், ராமாபுரத்தைச் சேர்ந்த பாஸ்கர் ஆகிய இருவரை கைது செய்தனர்.